Sunday, August 31, 2008

ஏதாவது செய்யணும் பாஸ்!

இன்று ஏதாவது செய்யணும் பாஸ்! பார்த்து, அதன்பின் நரசிம் அறிவித்திருக்கும் போட்டி
படித்தபோது தோன்றிய சில கருத்துக்கள்...

பல விஷயங்களில் அரசையும், அரசியல் வாதிகளையும் நம்பியது, 80-90 களோடு ஒழியட்டும். இன்றைய தேதியில் நிகழ்வது தகவல் புரட்சி. இதனுடன், தொழில் முனைவது ஒரு புரட்சியானால், நம் ஒவ்வொரு பொது பிரச்சினையுமே ஒரு வாய்ப்புதான்!

சில 'வாய்ப்புகள்' இங்கே ...

- TOI அறிவித்துள்ள teachindia போன்ற உதவி தேவைபடுகிறவர்களையும், உதவக்கூடிய ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்கும் வகையிலான சேவைகள் - இது பல பிரிவுகளுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு அனுபவம் தேடுவோர் ஒருப்பக்கம் - வேலை செய்வோருக்கு நிறைய சம்பளம் கொடுக்க முடியாத தொழில் முனைவோர் மறுப்பக்கம்; கல்வி செலவிற்கு பணம் தேவைப்படும் ஏழை மாணவர்கள் ஒருப்பக்கம்- உண்மையான தேவைகளுக்கு நன்கொடை கொடுக்க தயாரோனோர் மறுப்பக்கம்; volunteer mentoring for career/educational options; பரவலாக கிடைக்கதற்கரிய துறைகளில் உள்ள நிபுணர்களின் கருத்து பரிமாறுவதற்கான அமைப்புகள் (say a forum for entreprenuers to setup a Limited company with guidances on legal, funding challenges; export trade guidance for SME etc)

- சிறு விழாக்கள், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்கள் பற்றிய பெயர், தர, விவர சேவை.

- இணையம் மூலம் கார் பயணம் பகிர்தல் (realtime car pooling)

- நமக்கு தேவைப்படாத பொருட்களை விற்பதற்கான சந்தை (garage sale, charity sale events)

- நகர்புறங்களில், சிறு சிறு வேலை செய்பவர்கள் பற்றிய, தர உத்திரவாதத்துடன், வரையறுக்கப்பட்ட கூலியுடன் கூடிய பெயர்விவர சேவை - உதாரணத்திற்கு ஒரு சொந்த அனுபவம்.. சென்ற வாரம் பெங்களூர் போயிருந்தபோது, சுவரில் படங்கள் மாட்ட ஆணி அடிக்க, 1 மணி நேர வேலைக்கு, அரை நாள் தேடி, சில மணிநேரங்கள் காத்திருந்து 300 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. நொந்த விஷயம் என்னவென்றால், என் அவசரத்திற்கு, கிட்ட தட்ட கெஞ்சி, காரில் கூட்டி போய், காரில் திரும்ப விட்டு ம்ம் பேசாமல், அடுத்த முறை DIY தான் என்று நினைக்க வைத்தது :( ஒவ்வொரு முறையும், electrical, plumbing, தச்சு, கட்டிட பராமரிப்பு வேலை செய்ய முனையும் போதும் இந்த கதை தான்.

தெருவிற்கு இரண்டு electrical கடைகள் உண்டு நம் ஊரில், ஆனால், கடையை விட்டு எழுந்து வந்து, பயன் கூட்டும் சேவை கொடுக்க ஆள் கிடைக்காது நம் ஊரில். அப்படியே எழுந்து வந்தாலும், பெரும்பாலும் செய்யும் வேலையும் பாதி வேலை தான். US/UK இல் சின்ன வேலை செய்ய வந்தால் கூட, வேலை செய்தப்பின் இடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் சேர்த்து முடித்து பயன் கூட்டுவார்கள். நம் ஊரில், செய்யும் வேலையில், பல தரப்பிரிவுகள், ஆனால் செய்யும் தொழில் தெய்வம் என்று பேச்சு மட்டும் :(
நம் ஊரில் இருக்கும் மனித வளத்திற்கும், இன்றைக்கு உள்ள தகவல் தொழில் நுட்பத்திற்கும், இந்த மாதிரி வேலையெல்லாம், இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் சேவை பெற முடிந்தால், எவ்வளவு உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற ஆதங்கம் எழுகிறது.

இன்னுமொரு யோசனை, நேற்று சென்னை வீதிகளில் வந்தபோது, கொடிகள், தோரணங்கள் நட்டு கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கம் பார்த்தேன். இப்போதைக்கு கிட்ட தட்ட எல்லா கட்சிகளுமே, 'தொழில்' கட்சிகள் ஆகி, பெருமளவு 'outsourcing' செய்வது பொது அறிவு. இதை ஒட்டி தேர்தல் தொடர்பான சேவைகளை அளிப்பது ஒரு பெரும் வாய்ப்பாக எனக்கு தோன்றுகிறது. இந்த idea வை யாராவது develop செய்து business plan ரெடி பண்ணினால் venture capital கிடைப்பது நிச்சயம். think about this: தேர்தல்-சேவைகள்.காம் - with dedicated verticals for each political party, with clear NDA for confidentiality :)

Tuesday, August 12, 2008

வேலை தேடுவது என்றால், யாராவது வேலை தருவார்கள்/தரவேண்டும் என காத்திருப்பது அல்ல!

நீங்கள் உங்களை நம்பி, உங்களுக்குள்ள திறமையை பயன்படுத்தி, உங்களால் முடிந்த முதலை போட்டு, உங்களால் முடிந்த அளவு முயன்றால் உங்கள் உழைப்பே உங்களுக்கு வேலை ஆகிவிடும்.

ஒரு சின்ன கதையில் ஆரம்பிக்கிறேன் … ஒரு அறையில் மூடிய கண்ணாடி ஜன்னலில் முட்டி, முட்டி வெகு நேரம் முயற்சித்தது ஒரு வண்டு. அந்த முட்டாள் வண்டுவிற்கு, அருகில், திறந்திருந்த கதவு தெரியாமல் போனது, வீட்டுக்காரன் குற்றமா என்ன?

சமீபத்தில் வழி போக்கன் குறுப்பிட்டிருந்த (இ. சொ http://enthanvaanam.blogspot.com/2008/08/part2.html ), வங்கி வேலைக்கு முயலும் லட்ச கணக்கானோரை பார்க்கும் போது இது தான் தோணுகிறது.)

யாரவது வேலை தர வேண்டும் என்று, இருக்கின்றார்களே ஒழிய உருவாகும் வாய்ப்புக்களை பயன் படுத்த மாட்டேன் என்கிறார்கள். உதாரணத்திற்கு, வீடு, நிலம் வாங்க, வாடகைக்கு ஆள் பிடிக்க ஆயிரம் தரகர்கள் இருக்கிறார்களே தவிர, வெளி ஊர், வெளி நாடு வாழ் மக்களுக்கு தேவை படுகின்ற, வாடகை வசூல் செய்வது, சிறு, சிறு பராமரிப்பு பண்ணுவது, வரி, மின் கட்டணம் போன்றவற்றை கட்டுவது போன்ற பொறுப்புகளை ஏற்று, value added services ஆக தரக்கூடிய 'வீடு பராமரிப்பு' சேவை போன்றவற்றை கொடுக்க ஆள் இல்லை. இது மட்டும் இல்லை - வீட்டு வேலைக்கு ஆள் அனுப்ப தயார் ஆக இருக்கிறார்களே தவிர, வீட்டு வேலை ஆட்களை, ஒரு குழுவாக அமைத்து, ஒரு தொழில்முறை சேவையாக நடத்த ஆள் இல்லை.

மேலும் சில எனக்கு தோணும் சில வாய்ப்புக்கள் …
- அலைபேசி மூலம் வீடு வாசலில் சேவை (காய்கறி, பத்திரிகை, தபால், வங்கி வேலை)
- சிறு வியாபாரிகளுக்கு தேவை படும் ‘கொள்முதல்’ அல்லது கூரியர் சேவைகள்
- IPO/MF forms subbroking, forms distribution
- விளம்பர துண்டு பிரசுரம் விநியோகம்
- முதியோருக்கு தேவையான சேவைகள் – மருத்துவமனை, கார் ஓட்டுதல் போன்றவை
- கிராமபுரங்களில் இருந்தால் இருக்கும் சூழ்நிலை பொறுத்து அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான சிறு சேவைகள் – உதாரணத்திற்கு, அலைபேசி மூலம் விவசாய கூலிகள் ஏற்பாடு செய்து அனுப்புவது, உள்ளூர் விளைப்பொருள்களுக்கு ஒரு கூட்டுறவு முயற்சியாக, நல்ல விலை கிடைக்க முயல்வது

இது ஒரு குறிப்பிற்காகத்தான்... உங்களால் மட்டும் தான் உங்களுக்கு அருகில் உள்ள வாய்ப்பை கண்டுகொள்ள முடியும். தேடவேண்டும் என்று தோன்றவேண்டும், அதை தான் இங்கு முயல்கிறேன்.

வாழ்க்கையில் நாம் போக வேண்டிய தூரத்தை எப்போதும் ஒரே ‘பஸ்’ மூலம் போக நினைப்பது இயல்பு தான். ஆனால், அந்த பஸ்சுக்காக வாழ் நாள் முழுவதும் காத்திருப்பவர்கள், வீட்டை விட்டு வெகுதூரம் செல்ல வாய்ப்பில்லை. என் சமவயது மக்களில் சிலர் இன்னமும் ‘வேலை’ தேடுவது பற்றி கேட்டு நொந்த நேரமும் உண்டு. என்ன எல்லாம் விதிப்படி தான் - நீங்கள் விதியை நம்பும் வரை.

பி. கு. ஆங்கிலம் தெரிந்தால், ‘it happened in india’ போன்ற புத்தகங்களை கண்டிப்பாக தொழில் முனைவோர் படிக்க வேண்டும். வெற்றி ஒரு நாளில் வருவதில்லை – தொடரும் விடாமுயற்சிக்கு ஒரு கட்டத்தில் விளயவேண்டிய ஒன்று தான் வெற்றி என்பது.

Sunday, August 10, 2008

மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?

தமிழில் எழுத தெரிந்த எல்லோரும் தமிழ் எழுத்தாளர்கள் ஆனால் 'சாரு' போன்றவர்களுக்கு எப்படி பிழைப்பு நடத்த முடியும்? இதைப்போலத்தான் ஒவ்வொரு தொழிலும். எல்லோருக்கும் வேலை வேண்டுமானால் பலர் புதிய வாய்ப்புக்களை தேடித்தானே போக வேண்டியிருக்கிறது.

புது வழி கண்டு பிடிப்போரை போற்றும் அளவிற்கு புரியாவிட்டாலும், இளப்பமாக பேசாமல் இருக்கிற அளவிற்கு கூட பொது அறிவு போத வில்லை என்றால் ஜாதி அரசியலையோ அல்லது தமிழுணர்வு பற்றியோ கருத்து சொல்ல வேண்டியது தானே. He appeared to be intelligent and then he spoke என்று எனக்கு பிடித்த வரி ஒன்று உண்டு. கருத்து சொல்லும் வரை, உம் கருத்தின் அருகதை உமக்கு மட்டும் தான் தெரியும், இப்போது எல்லோருக்குமே தெரியுமே - பாவம் தான் சார் நீங்க.

90 களின் ஆரம்பம் முதல் இந்த மென்பொருள் துறையில் சேராமல் இருந்தால் இத்தனை லட்சம் பேர்களும் என்ன பண்ணி இருப்பார்கள்?

91 யில் இறக்குமதியை (balance of payments) சமாளிக்க முடியாமல் நம் நாடு தங்கத்தை லண்டனில் அடகு வைத்த கதை இவர்களுக்கு எல்லாம் புரியுமா? அந்த நிலை ஏற்பட்ட வருடத்தில் நம் நாட்டிற்க்கு மென்பொருள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய மொத்த அந்நிய செலாவணியையும் சேர்த்தால் ஒரு சில ஆயிரம் கோடிகள் மட்டுமே (used to be accounted under invisibles category because it was so minuscle portion of overall). ஆனால் இப்போது வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்புவது மட்டும் வருடத்திற்கு $25Bnக்கு மேல்(1 லட்சம் கோடி ரூபாய்கள்); இது தவிர்த்து மென்பொருள் ஏற்றுமதியில் வருமானம் $50Bnக்கு மேல்(2 லட்சம் கோடி).

இந்த கோடிகளின் மதிப்பு, நாடளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் கூட நம்மால் இறக்குமதி பண்ணி பட்டினி சாவை தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தேடுவர்களுக்கு புரியும். லோக்கல் சரக்கு வாங்கி வயிறு வளர்க்கும் எல்லோருக்கும் புரியுமா என்ன?

அது போகட்டும், சாருநிவேதிதா மாதிரி பிதற்றும் ஆட்கள் செய்யும் தொழில்களையே பார்ப்போம் - அச்சுதொழிலின் மூலப்பொருளான newsprint தட்டுபாடுகளும், அதனையொட்டி நசிந்து போன பத்திரிகைகளும், வேலை இழந்த எழுத்தாளர்களையும் இவர்கள் நினைத்து பார்ப்பார்களா?

நம் நாடு கடந்த 10-15 வருடங்களில் பொருளாதாரத்திலும், நாட்டுப்பற்றிலேயும், கல்வியறிவிலும், தனி மனித சுதந்திரத்திலும், பாரபட்சமற்ற சமூக முன்னேற்றத்திலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு catalyst மென்பொருள் துறை என்பது வரலாற்றில் மாற்றமுடியாத உண்மை. அதில் முதல் தலைமுறை என்ற வகையில் என்னை போன்றவர்களுக்கு என்றைக்குமே பெருமை தான்.

போற்றதகு செயல்களை செய்து பேர் எடுப்பவர்கள் ஒரு பக்கம். பேர் எடுத்தவர்களை குறை சொல்லி பேர் எடுக்க நினைப்பவர்கள் இன்னொரு பக்கம்.

வரலாற்றில் எதை வேண்டுமானாலும் இவரை போன்றவர்கள் பல தலைமுறைகளாக மாற்றி வந்திருந்தாலும், இப்போது நடப்பது தகவல் புரட்சியாயிற்றே, என்ன செய்து விடமுடியும் இவர்களால் - நமக்கென ஊடகம் நடத்தும் நம்மிடம் :)

பதிவா நமக்கா என்றிருந்த எனக்கு, வழிபோக்கனின் பதிவு (இங்கே சொடுக்கவும்) மற்றும், அவர் குறிப்பிட்ட சாருநிவேதிதாவின் வலைப்பதிவும் (இ.சொ.) இந்த பதிவை போட தூண்டியவை (வேலையில்லாத ஞாயிறு மாலை மட்டும் தான் காரணம் என்று நினைத்து விடாதீர்கள்)

Thursday, August 7, 2008

இன்று முதல்...

வாசிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிலே எனக்கு தமிழ் பதிவுகள் படிப்பது ரொம்பவும் பிடித்து விட்டது. அதனால் என் மனம் கவர்ந்த பதிப்புகளை குறித்து வைத்து கொள்ளவும், பின்னோட்டம் மூலம் கருத்து பரிமாறி கொள்ளவும் இன்று முதல் இந்த வலை தளத்தை பயன் படுத்த போகிறேன்.

இப்போதைக்கு சொந்த பதிவுகள் போடும் திட்டம் எனக்கு எதுவும் இல்லை.