Thursday, March 4, 2010

முட்டாள் மனிதர்கள்!

ஏதோ சாமியாராம். அவர் இப்போது அவர்கள் நினைத்த மாதிரியான சாமியார் இல்லையென்று என்று தெரிந்து விட்டதாம். அதனால் அவர் இதுவரை சொல்லிவந்த, நேற்று வரை சரியானதாக தோன்றிய கருத்துகள் எல்லாம் களங்கப்பட்டுவிட்டதாம்.அதனால் அவர் மீதும், அவரை இதுவரை நம்பி வந்தவர்கள் மீதும், அவரோடு உறவாடியவர்கள் மீதும் கோபம் கோபமாய் வருகிறதாம்.

இப்படி கோபப்படுபவர்கள் தத்தம் தன்னம்பிக்கை மீறிய சாமியார் நம்பிக்கைகளின் பின்னுள்ள மடமையை கோபம் மூலம் மூடிக்கொள்வதாகவே எனக்கு படுகிறது.

பங்காரு போன்றவர்கள் எறும்பு, ஈசல் வாழும் மண் புற்றில் சுயம்பு சக்தி என்று புருடா விட்டு இன்று சில ஆயிரம் மாணவர்கள் கொண்ட கல்வி நிறுவனங்கள் நடத்தும் போது,புது சாமியார்கள், அதை ஒரு career choice ஆக நினைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் - அதை நம்புவர்கள் அல்லவா முட்டாள்கள்.

Hypocrites rule!

எல்லா பொய்மைகளும் ஒவ்வொருவிதத்தில் ஒன்றோடு ஒன்றாகி நம் சமூக முறைகளாய் இருக்கும் வரை தனிப்பட்ட முரண்பாடுகள் களைவது அதீத முயற்சி தான். ஆனாலும் ஒவ்வொன்றாய் விடியும் :)

Thursday, February 25, 2010

சுஜாதா... எழுத்திலடங்கா எண்ண அலைகள்!


சுஜாதா இறந்ததை அறிந்த போது வருத்தம் வார்த்தையில் வரவில்லை.

இன்று அவர் பற்றிய நரசிம்மின் வார்த்தைகளை படித்தபொழுது எழுந்த நினைவலைகள் இங்கே.

வலையுலகம் இல்லா காலத்தில், தாய்மொழி மட்டும் அறிந்திருந்த எண்ணிலடங்கா வாசகர்களுக்கு, பல துறை சார்ந்த அறிவையும், பொழுது போக்காக, ஒரு நண்பராக - its no big deal என்ற அளவில், கல்லாததை பற்றிய பயம் தோற்றுவிக்காமல், கற்பதற்கான ஆர்வத்தை உருவாக்கியவர்.

எப்பொழுதும், எந்த வகையில் பார்த்தாலும், ஒரு முற்போக்கானவராகவும், இளமையான பார்வைகளை, துள்ளல் குறையாமல் அதே சமயம் முதிர்ச்சியாக, நிலை தளராமல் கையாள்வதிலும் அவரை தவிர்த்து தமிழ் எழுத்துக்கள் முழுமை அடையா.

அனுபவித்ததை பகிர்வதாக இருந்தாலும் சரி, கற்பனைகளின் ஆனந்தங்களை உணர்த்துவதனாலும் சரி, பள்ளி கல்வியின் இடைவெளி நிரப்புவதிலும் சரி, எந்த பக்கம் யோசித்தாலும், யோசித்து முடிக்கவும் முடியவில்லை, அவரை சிலாகிக்காமலும் இருக்க முடிவதில்லை.

அவர் எழுத்தின் பின் இருந்த ஊக்கம் பற்றி எனக்கு எப்போதும், இப்போதும், அளவிலங்கா ஆர்வம் உண்டு. அவர் கடைசி துளி உயிர் பிரியும் போது கூட, பகிரத்துடிக்கும் எண்ணங்களையே அவர் மனம் நினைத்திருந்துக்க கூடும் என்று நினைக்கிறேன்.

செறிந்த பண்பாளராகவும், தெறிந்த சிந்தனையாளராகவும், எழுத்தின் வாயிலாக நம் தேடலை தூண்டி அதன் மூலம் நம்மில் பலரின் சுயவளர்ச்சிக்கு வித்திட்ட வகையில், பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவராக என் நினைவில் அவர் என்றும் இருப்பார்.